பரிசை நோக்கி
அதீத அமைதி ஆட்கொள்ள அவ்வப்போது கிடைக்கும் சந்துகளில் ஒளிந்து கொள்கிறேன்... அவர்கள் விருப்பத்திற்கு ஏகுவாய் நானும் சிரிக்கிறேன், சிரித்த நொடியே பல்லியாய் நெளிந்து செல்கிறேன்... அத்தனை பேருக்கும் ஒரு கதை சொல்கிறேன், அதில் ஒருவனாய் என்னையும் சேர்த்து என்னையே நம்பச் சொல்கிறேன்... முருகனை வேண்டுகிறேன், வேண்டியவனை மூடன் என்கிறேன். நல்லது அல்லது நானே, நானில்லை நானில்லை அவனே, இல்லை இம்முறை நானே. பறவை பட்டாம்பூச்சியை பார்க்க மறக்கிறேன்; பார்த்தால் ரசித்தால் உவக்கும் சிறக்கும், ஊருக்கு உரைக்கிறேன்... கோடிட்ட இடத்தில் மேலும் கோடிட்டு ஓடப் பார்க்கிறேன், பாடி முடித்ததும் பரிசில் வேண்டும் பாவம் நான் கெஞ்சுகிறேன்... நான் நகரவே உலகம் நகர விருப்பம் கொள்கிறேன். நிற்க ஆணையும் இடுகிறேன், நிற்காவிட்டால் நான் நின்று கொண்டு உலகத்தை ஏய்க்கிறேன்... அதீத அமைதியில், சந்துகளில் ஒளிந்து, பல்லியாய் நெளிந்து, கிடைக்கும் காதுகளுக்கு அடைக்க கதை சொல்லி, பரிசில் கிடைக்குமா? எதிர் பார்க்கிறேன். - சா.கவியரசன். 21-4-22 Cover Photo courtesy : Milan Art Institute.