எனதருமை பீகார்
எனதருமை பீகார் மேற்கத்திய கழிவறை கிடைத்தால் அமர அருமையான இடம், அடியில் திறந்து எச்சில் துப்பிக் கொள்ளலாம். இந்திய கழிவறையாய் இருந்தால் கொஞ்சம் சிரமம் தான், நின்று தான் வர வேண்டும், நீர் நிரம்பி மலம் மிதந்து இரயிலின் தடதடபுக்கு இசைந்து கொடுக்கும், மூடவும் முடியாது பழகிவிட்டால் சுபம்... மழைக் காலமாக இருந்தாலாவது பரவாயில்லை ஆனால் அது வெயில் காலம்... இரும்பு பெட்டிக்குள் இருக்கும் இடத்தில் காற்று தவழ்ந்து செல்வதே கடினம்... மடக்க முடிந்த அளவு கை கால்களை மடக்கி வை... அடக்க முடிந்த அளவு கண்களைக் கொண்டு கற்ற வார்த்தைகளைக் கொண்டு அடுத்தவனை அடக்கி கிடைத்த இடத்தில் காலை வை... அமர இடம் கிடைத்தால் ஆசிர்வதிக்கப் பட்டவன் என்று ஶ்ரீராமரை நினை... மற்றவர் முதுகை முத்தமிட வேண்டும், வியர்வை நெடியை விரும்பிப் பழக வேண்டும், குமட்டல் வரும் நேரம் புகையிலைத் தூளால் வாயை அடைக்க வேண்டும், கிடைத்த இடத்தில் காரி உமிழ்ந்து காவியால் தங்கள் வாய்த்தடம் பதிக்க வேண்டும். ஒரு லிட்டர் பாட்டிலில் ஊர வைத்த சுண்டல் பத்து பச்சை மிளகாய், இரண்டு எழுமிச்சை இரண்டு நாள் பயணம், இறங்கியதும் மனைவி பிள்ளைகளைத் தேடிக் கொள்ளலாம்.